search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூரில் மளிகை கடையின் சுவரை துளையிட்டு மர்மநபர்கள் துணிகர கொள்ளை
    X

    திருச்செந்தூரில் மளிகை கடையின் சுவரை துளையிட்டு மர்மநபர்கள் துணிகர கொள்ளை

    திருச்செந்தூரில் மளிகை கடையின் சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் தங்கம், நகை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இரும்பு ஆர்ச் அருகே ஒரு மளிகை கடை உள்ளது. இந்த கடையை திருச்செந்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடித்து கடையை வழக்கம்போல பூட்டி சென்றனர்.

    இன்று அதிகாலை ராதாகிருஷ்ணனின் மகன் சீதாராமன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பக்க சுவரில் ஜன்னல் அருகே சுவரில் பெரிய துளை போடப்பட்டிருந்ததை பார்த்தார். சந்தேகம் அடைந்த சீதாராமன் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் மேஜையில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை கொள்ளைபோயிருந்தன.

    அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து நகை -பணத்தை அள்ளிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி திருச்செந்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த மளிகை கடையின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் திருட்டு கும்பல் குறித்த காட்சிகள் பதிவாகியிருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×