search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை இன்றும் தாக்கல் இல்லை -  கூடுதல் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம்
    X

    உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை இன்றும் தாக்கல் இல்லை - கூடுதல் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டனர்.

    ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, ஆகஸ்டு 6-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணை தாக்கல் செய்யப்படவில்லை.

    மாறாக, தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கு கூடுதலாக 3 மாதம் அவகாசம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வரையறை  அறிக்கை ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாகவும், அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட 3 மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும்   மாநில தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    Next Story
    ×