search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் மாவட்டத்தில் அம்மா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி
    X

    விருதுநகர் மாவட்டத்தில் அம்மா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி

    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி அம்மா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

    சாத்தூர்:

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து கூறும் வகையிலும் நாடாளு மன்ற தேர்தல் பணிகளை தொடங்கும் வகையிலும் விருதுநகர் மாவட்டம் மற்றும் நான்கு மாவட்டங்களில் 21 சட்டமன்ற தொகுதியில் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

    வருகிற 13-ந் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சைக்கிள் பேரணி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர். 14-ந் தேதி சாத்தூரில் தொடங்கும் சைக்கிள் பேரணி சாத்தூரில் உள்ள பல்வேறு குக்கிராமங்களில் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் விழா நடைபெறுகிறது.

    அதனையொட்டி ராஜபாளையம் வழியாக சைக்கிள் பேரணியாக சென்று அரசின் சாதனைகளை எடுத்துரைத்து ஸ்ரீவில் லிபுத்தூரில் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    14-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சைக்கிள் பேரணியாக புறப்பட்டு பல்வேறு பட்டாசு தொழி லாளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துரைத்து சிவகாசி தொகுதிக்கு வந்தடைகிறது. அங்கு அரசின் சாதனைகளை எடுத்துரைக்கின்றனர்.

    வருகிற 15- தேதி சிவகாசியில் இருந்து புறப்பட்டு பல்வேறு கிராமங்களில் சைக்கிள் பேரணியாக சென்று விருது நகரை வந்தடைகின்றனர்.

    16-ந் தேதி அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழியெங்கும் சாதனைகளை எடுத்துரைத்து காரியாப்பட்டியில் சைக்கிள் பேரணியை நிறைவு செய்கின்றனர்.

    சாத்தூரில் வருகிற 13-ந் தேதி நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை விருதுநகர் மாவட்ட செயலாளரும், பால் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டை மணிகண்டன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், வக்கீல் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×