search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறு தேர்வு எழுதும் காலத்தை குறைத்தால் ஊழலை தடுக்கலாம் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
    X

    மறு தேர்வு எழுதும் காலத்தை குறைத்தால் ஊழலை தடுக்கலாம் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்

    மறு தேர்வு நடத்தும் கால அவகாசத்தை குறைத்தால் ஊழலை தடுக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறி உள்ளார். #AnnaUniversity
    சென்னை:

    தேர்வுத்தாள் மறு மதிப்பீடு ஊழல் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பேட்டியளித்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தேர்வுத் துறையில் முறைகேடு நடந்திருப்பதாக எனக்கு தகவல் வந்ததுமே அது பற்றி விசாரிக்க ஒரு குழு அமைத்தேன். அந்த முறைகேடுகளில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.

    முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



    தேர்வுத்தாள் மறு மதிப்பீட்டு ஊழலில் நிறைய பேருக்கு தொடர்புள்ளது. கல்லூரிகள் மூலம்தான் பெரிய அளவில் இந்த முறைகேடு நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இதில் தொடர்பில்லை. கல்லூரிகள் அளவில்தான் இவையெல்லாம் நடந்துள்ளது. 10, 12 ஆண்டுகளாக அரியர்ஸ் வைத்திருப்பவர்களால் இத்தகைய முறைகேடுகள் நடக்க காரணமாகி விடுகின்றன.

    இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மறு தேர்வு நடத்தும் கால அவகாசத்தை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். 6 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் இந்த பிரச்சினை வராது.

    தேர்வுத்தாள் மறு மதிப்பீடுக்கு மனு செய்த அனைத்து மாணவர்களும் பணம் கொடுத்து மதிப்பெண் பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது. சில மாணவர்களே அந்த முறைகேடுகளை செய்துள்ளனர்.

    தேர்வு மற்றும் மதிப்பீடு பணிகளில் மாற்றங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியும். அண்ணா பல்கலைக்கழக பணிகளில் எந்த ஊழலும் நடந்து விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

    இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார். #AnnaUniversity

    Next Story
    ×