search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை திருடர்களை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு
    X

    சிலை திருடர்களை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு

    ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்த சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் திருடர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது என்று விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். #IdolSmuggling
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பல ஆண்டுகளாக கோவில் சிலைகளும், விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சாமி சிலைகளையும், பொருட்களையும் மீட்டுள்ளனர். உதாரணமாக வெளிநாடுகளில் இருந்தும், குஜராத்திலிருந்தும் ராஜராஜசோழன் சிலையை மீட்டு கொண்டுவந்தார்கள்.

    இதை பாராட்டி தமிழக அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்றார். பல சாமி சிலைகள் திருடு போயிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து 100 கிலோ தங்கத்திற்கு மேலாக காணிக்கையாக பெறப்பட்டு, முழுமையாக திருடப்படிருப்பதை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


    இதைத் தொடர்ந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் அவர்களை கைதும் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நேர்மையான அதிகாரிகளிடம் இருந்து, சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் கண்டனத்திற்குறியது.

    ஒரு துறையில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி, அதில் நடந்திருக்கும் குற்றங்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில், நேர்மையான அதிகாரிகளுக்கு தமிழக அரசு துணைநின்று ஊக்கப்படுத்தாமல், திருடர்களுக்கு சாதகமாக அரசு முடிவு எடுப்பது, திருடர்களை காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சாமி சிலைகளையும், கோவில் சொத்துக்களையும் கொள்ளையடிப்பவர்களை சட்டத்தின் படி இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டும்.

    மேலும் கோவில் சொத்துக்களை திருடுபவர்களையும், அவர்களை காப்பாற்ற நினைப்பவர்களையும் “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்”.

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாமல், தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைகள் செயல்படுவதன் மூலம் தான் உண்மையான குற்றவாளிகள் கண்டரியப்படுவார்கள். பல ஆண்டுகளாக கடத்தப்பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்திலே ஏற்பட்டுள்ளது. ஆகவே நேர்மையான அதிகாரிகள் பணியில் தொடரவேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #IdolSmuggling #Vijayakanth
    Next Story
    ×