search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மட்டம் குறைந்தது - குட்டையாக மாறிய பூண்டி ஏரி
    X

    நீர்மட்டம் குறைந்தது - குட்டையாக மாறிய பூண்டி ஏரி

    கண்டலேறு அணையில் இருந்து வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் பூண்டி ஏரி தற்போது குட்டை போல் காட்சியளிக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    அதன்படி கடந்த டிசம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் ஜனவரி 2-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. அதிகபட்சமாக 2450 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்டசமாக 610 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது.

    இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு மார்ச் 26-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த இடைபட்ட காலத்தில் 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. கிருஷ்ணா தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டதால் தற்போது பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

    இதன் காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மே 21-ந்தேதி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி இரண்டாம் தவணையாக ஜூலை முதல் தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு ஜூன் மாத இறுதியில் கடிதம் எழுதினர்.

    பருவ மழை பெய்தால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட ஆந்திர அதிகாரிகள் எண்ணி இருந்தனர். ஆனால் பருவ மழை பொய்த்து போனதால் அது சாத்தியபடவில்லை.

    கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். ஆனால் தற்போது வெறும் 4.50 டிஎம்சி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இதன் காரணமாக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் தமிழக அதிகரிகளிடம் போனில் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் பூண்டி ஏரி தற்போது குட்டை போல் காட்சியளிக்கிறது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 48 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 22 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
    Next Story
    ×