search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் மையம்
    X
    கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் மையம்

    திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்

    திருப்பூரில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். #ATMrobberytry

    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் 2- வது வீதியில் தனியார் பனியன் கம்பெனி வளாகத்தில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

    இந்த ஏ.டிஎம். பகுதியில் நேற்று நள்ளிரவு வாலிபர் ஒருவர் சுற்றி கொண்டு இருந்தார். அவரது கையில் ஆயுதம் இருந்தது. அவர் ஏ.டி.எம்.மிற்குள் நுழைவதும் பின்னர் வெளியில் வருவதுமாக இருந்தார். சுமார் அரை மணி நேரம் அங்கு சுற்றி கொண்டு இருந்தார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் சுற்றி வந்தது தெரிய வந்தது.

    இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் பதிவானது.

    இதனை பார்த்த மும்பை அதிகாரிகள் ஏ.டி.எம்.மில் பணத்தை கொள்ளையடிக்க தான் வாலிபர் சுற்றி திரிகிறார் என நினைத்தனர். அவர்கள் திருப்பூர் மாநகர போலீசுக்கும், திருப்பூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் திருப்பூர் போலீசாருக்கு எந்த ஏ.டி.எம். என உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரம் போராடிய பின்னர் தான் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையம் என்பது தெரிய வந்தது.

    அங்கு விரைந்து சென்றனர். ஏ.டி.எம்.மில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் வாலிபர் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமான காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து அந்த வாலிபர் யார் என்பது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அப்பகுதியில் வேறு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? அதிலும் இந்த வாலிபர் உருவம் பதிவாகி இருக்கிறதா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஏ.டி.எம்.எந்திரத்தை உடைக்க வாலிபர் சுற்றி வந்ததை மும்பை தலைமை அலுவலகத்தில் இருந்து சரியான நேரத்தில் கண்டுபிடித்து விட்டதால் ஏ.டி.எம்.மில் இருந்த பணம் தப்பியது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மை வாலிபர் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ATMrobberytry

    Next Story
    ×