search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடுகத்தூர் அருகே மனைவியை கொன்ற தொழிலாளி தற்கொலை
    X

    ஒடுகத்தூர் அருகே மனைவியை கொன்ற தொழிலாளி தற்கொலை

    ஒடுகத்தூர் அருகே மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். #Murdercase

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்த ஆசனம்பட்டு காமராஜர் நகர் பகுதியில் உள்ள தென்புதூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் ஸ்ரீதர் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அணைக்கட்டு அருகே உள்ள அப்புக்கல் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகள் இளவரசிக்கும் (28) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராஜ்குமார் (9), நவீன்குமார் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    ஸ்ரீதருக்கும் மனைவி இளவரசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி இரவு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 மகன்களும் தூங்கிய பிறகு ஆத்திரத்துடன் இருந்த ஸ்ரீதர் மனைவி இளவரசியின் கழுத்தை கத்தியால் சரமாரியாக அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் இளவரசி சாய்ந்தார். உடனே அவரை அருகில் உள்ள அறைக்குள் இழுத்துப்போட்டு கதவை மூடினார்.

    ரத்தம் வழிந்த இடத்தை சுத்தம் செய்த ஸ்ரீதர் இரவு முழுவதும் பயத்தில் அங்கேயே இருந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் நாம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் சிகிச்சைக்கும் கொண்டு செல்லாமல் பதற்றமாக காணப்பட்டார்.

    காலையில் அவரது மகன்கள் எழுந்து அம்மா எங்கே? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் வெளியே சென்றுள்ளார் என்று மட்டும் பதில் அளித்து விட்டு அவர்களை குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்பினார்.

    ஸ்ரீதரின் மனைவி இளவரசி அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலம்போடுவார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் ஸ்ரீதரிடம் கேட்டுள்ளனர். சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டுக்குள் பூட்டிய அறையை திறந்தபோது இளவரசி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், போலீசார் நம்மை கைது செய்து விடுவார்களே என நினைத்து மற்றொரு அறைக்குள் ஓடிச்சென்று கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பொதுமக்கள் அவரை மீட்டு வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஸ்ரீதரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதர் இன்று அதிகாலை இறந்தார். இந்த சம்பவம் ஒடுகத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×