search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆற்றில் இருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    காவிரி ஆற்றில் இருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

    கோரிக்கைகளை ஏற்று காவிரி ஆற்றில் இருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே புகளுர் வாய்க்கால் செல்கிறது. இவ்வாய்க்கால் நொய்யல் மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப் பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி வழியாகவும், அதே போல் புகளுர் செம்படாபாளையம் வழியாக பிரியும் முதலியார் வாய்க்காலில் இருந்து கடம்பங்குறிச்சி என்.புதூர் வாங்கல், கருக்கம்பாளையம் வழியாக செல்கிறது.

    கரூர் மாவட்டத்தில் நொய்யல் முதல் வாங்கல் வரை சுமார் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு, வாழை, வெற்றிலை, நெல், கோரை, பூக்கள், மரவள்ளிகிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பணப் பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில மாத காலமாக காரணாம்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால், புகளூர் வாய்க்காலை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்களின் விவசாய பயிர்களான வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை, நெல், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதியுற்று வந்தனர். இதனால் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வந்தன.

    இந்தநிலையில் கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

    மேட்டூர் அணையிலிருந்து சுமார் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜேடர்பாளையம் அணைக்கட்டிலிருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றும் கடந்த வாரம் புகளுர் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முன்தினம் புகளூர் வாய்க்காலுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் புகளூர் வாய்க்காலில் குறைந்தளவு தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது.

    எனவே புகளுர் வாய்க்காலில் கடைமடை தண்ணீர் செல்ல அதிக தண்ணீர் திறந்துவிட வேண்டுமென நொய்யல், வேலாயுதம்பாளையம், வாங்கல் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றிலிருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×