search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்கூடலூரில் கற்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
    X

    மேல்கூடலூரில் கற்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

    மேல்கூடலூரில் கற்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் குடியிருப்புகளும் சேதம் அடைந்து வருகிறது. கூடலூர்- மைசூரு, சுல்தான்பத்தேரி செல்லும் சாலையோரம் தடுப்பு சுவர்கள் இடிந்து சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பல இடங்களில் சாலைகள் சரியில்லாததால் லாரிகளும் விபத்துக்குள்ளாகி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு துப்புக்குட்டிபேட்டை பகுதியில் கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோரம் சென்றபோது திடீரென பின்பக்க சக்கரங்கள் மண்ணில் சிக்கியது.

    இதனால் துப்புக்குட்டிபேட்டை கல்குவாரி பகுதியில் வாகனங்கள் செல்லமுடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.

    நேற்று காலை 7 மணிக்கு கூடலூரில் இருந்து கற்களை ஏற்றி கொண்டு மேல்கூடலூர் ஓ.வி.எச். சாலையில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை காளம்புழா பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ்(வயது 45) என்பவர் ஓட்டினார். அப்போது மேல்கூடலூர் ரேஷன் கடை அருகே உள்ள தனியார் நிலத்தில் கற்களை கொட்டுவதற்காக லாரி டிரைவர் ரமேஷ் கம்ப்ரசரை இயக்கினார். பின்னர் லாரியின் பின்பக்கம் உள்ள டிப்பர் உயரே சென்று கற்களை கிழே கொட்டி கொண்டிருந்தது.

    இந்த சமயத்தில் லாரியும் ஒருபுறமாக கவிழ்ந்தது. இதில் லாரியின் உள்ளே இருந்த டிரைவர் ரமேசின் வலதுபுற கை லாரியின் அடியில் சிக்கியது. அவரால் கையை வெளியே எடுக்க முடிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் லாரியின் அடியில் கை சிக்கியதால், பலத்த காயம் அடைந்த டிரைவர் ரமேசை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் போலீசார் விரைந்து வந்து கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூர் பகுதியில் மழை தொடர்வதால் லாரிகள் விபத்தில் சிக்கி வருவதாக போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×