search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம்-தா.பழூரில் காவலர் குடியிருப்பு கட்டிடம் திறப்பு: முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
    X

    ஜெயங்கொண்டம்-தா.பழூரில் காவலர் குடியிருப்பு கட்டிடம் திறப்பு: முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

    ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூரில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.10.73 கோடி மதிப்பீட்டில் 87 காவலர்களுக்கான குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூரில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.10.73 கோடி மதிப்பீட்டில் 87 காவலர்களுக்கான குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட எஸ்.பி அபினவ் குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கூறுகையில்,

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட காவலர்களுக்கான குடியிருப்புகள் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரால், ஜெயங்கொண்டம் போலீஸ்நிலையத்திற்கு ரூ.9 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆய்வாளர்கள், 5 சார்பு ஆய்வளர்கள், 53 காவலர், தலைமைக் காவலர்களுக்கான குடியிருப்புகளையும், 6 அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்கான குடியிருப்புகளும் மற்றும் தா.பழூரில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் 1 சார்பு ஆய்வாளர், 20 காவலர், தலைமை காவலர்களுக்கான குடியிருப்புகளையும் என ரூ.10 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 87 காவலர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்கள்.

    இக்குடியிருப்புகளில் 1 வரவேற்பறை, 2 படுக்கறைகள், 1 சமையலறை, 1 கழிவறை மற்றும் தண்ணீர் வசதிகளுடன் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஜயலெட்சுமி தெரிவித்தார்.

    அதன் பின்னர் குடியிருப்பு பகுதிக்கு முன்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனை தொடர்ந்து நான்கு ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியின் போது ஏடிஎஸ்பி பெரியய்யா, ஆர்டிஓ. ஜோதி, டிஎஸ்பி கென்னடி, தாசில்தார் குமரய்யா மற்றும் காவலர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மகளிர் காவலர் கார்த்திகா நன்றி கூறினார்.
    Next Story
    ×