search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் நடமாட்டம்
    X

    மஞ்சூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் நடமாட்டம்

    மஞ்சூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. கிராமங்களை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் விளை நிலங்களில் காட்டெருமைகள் கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையாடுவதுடன் தோட்டங்களையும் நாசம் செய்து வருகின்றன.

    காட்டெருமைகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் இப்பகுதிகளில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டு விட்டனர். மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமைகளால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் மெரிலேண்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்தது.

    அப்போது தோட்டத்தில் தேயிலை பறித்து கொண் டிருந்த தொழிலாளர்கள் காட்டெருமைகள் கூட்டத்தை கண்டு இலை பறிப்பதை பாதியில் நிறுத்தி தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    காட்டெருமைகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என வனத்துறைக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    Next Story
    ×