search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை: தலைமறைவான மனைவிக்கு வலைவீச்சு
    X

    கள்ளக்காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை: தலைமறைவான மனைவிக்கு வலைவீச்சு

    அரியலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே  உள்ள சிறுகடம்பூர் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 40). இவரது மனைவி ஜெயா (32). இந்த தம்பதிக்கு ஜெயபால் (7) என்ற மகனும், ஜெயஸ்ரீ (6), தன்யஸ்ரீ (4) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

    கோவையில் கூலி வேலை பார்த்து வந்த துரைராஜ் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது முதல் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. அதற்கேற்றாற்போல் இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி ஜெயா செல்போனில் நீண்ட நேரம் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    ரகசியமாக விசாரித்ததில் ஜெயாவுக்கும். அதே ஊரைச்சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு  இருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைராஜ் தனது மனைவியை கண்டித்தார். எனவே கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த துரைராஜ் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டின் வெளியே கட்டிலை போட்டு தூங்க சென்றார்.

    இன்று காலை துரைராஜ் கட்டில் போடப்பட்டிருந்த இடத்தின் அருகேயுள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.  இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள்  உடையார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய துரைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக துரைராஜின் உடலில் கழுத்து, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் தென்பட்டன. எனவே அவரை யாரோ அடித்துக்கொலை செய்து விட்டு அதனை மறைப்பதற்காக தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    மேலும் இன்று காலை முதல் துரைராஜின் மனைவி ஜெயா தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் கணவரை கொன்று விட்டு தலைமறைவாகி விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் ஜெயாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×