search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல்
    X

    வேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல்

    வேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மங்களூர். இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் குடிநீர் தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த 1 மாத காலமாக சீரானமுறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் பழுதான மின்மோட்டாரை சீர் செய்யக்கோரி மங்களூர் ஊராட்சி செயலாளருக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் மனுகொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதையடுத்து குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மங்களூர் பஸ்நிலையம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×