search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் ரெயில் நிலைய யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி
    X

    விழுப்புரம் ரெயில் நிலைய யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி

    விழுப்புரம் ரெயில் நிலைய ‘யார்டில்’ தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள ‘யார்டில்’ (ரெயில்கள் பராமரிக்கும் இடம்) நேற்று தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதற்காக ‘பேக்கிங் மெஷின், பேலஸ் கிளினீர் மெஷின்’ என்ற ராட்சத எந்திரங்கள் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு ரெயில்வே நிலைய யார்டில் பராமரிப்பு பணிகள் நடந்தது.

    தண்டவாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பழைய ஜல்லிக்கற்கள், மண் ஆகியவை அகற்றப்பட்டு புதிதாக கொட்டப்பட்டது. அதேபோல் பழைய சிலிப்பர் கட்டைகளும் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இந்த பணியில் எலக்ட்ரிக்கல், சிக்னல் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    இந்த பணிகள் காரணமாக நேற்று சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லக்கூடிய பயணிகள் ரெயில், திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லக்கூடிய பயணிகள் ரெயில் ஆகிய 2 ரெயில்களும் திண்டிவனம் ரெயில் நிலையம் வரையும், மேல்மருவத்தூர்- விழுப்புரம் பயணிகள் ரெயில் முண்டியம்பாக்கம் வரையும் இயக்கப்பட்டது.

    அதேபோல் திருச்சி- சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை 30 நிமிடம் தாமதமாக சென்றடைந்தது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு மதுரைக்கு புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக மதியம் 2.40 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு காட்பாடிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயில் 45 நிமிடம் தாமதமாக மாலை 5.20 மணிக்கும் புறப்பட்டன. 
    Next Story
    ×