search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 17 பேரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியது போலீஸ்
    X

    சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 17 பேரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியது போலீஸ்

    சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி 7-ம் வகுப்பு படிக்கிறார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அந்த மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்த சிறுமி பேசுவாராம்.

    இதை பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்களின் பிடியிலும் சிக்கியுள்ளார். சுமார் 7 மாத காலமாக இந்த கொடுமை நீடித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரி வெளிமாநிலத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.  அவரிடம் தான் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தகவல் சொல்லி அழுது இருக்கிறார். அதன் பிறகு தான் சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரியவர, அவர்கள் போலீசில் புகார் கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் அயனாவரம் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கினர்.

    லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களில் 17 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தலைநகர் சென்னையில் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    Next Story
    ×