search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிப்பு - காவலாளிகள் உள்பட 6 பேர் கைது
    X

    அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிப்பு - காவலாளிகள் உள்பட 6 பேர் கைது

    சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை 16 பேர் கற்பழித்து தொடர்பாக காவலாளிகள் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை 16 பேர் கற்பழித்து உள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில் முதல்கட்டமாக காவலாளிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 350 வீடுகள் உள்ளன. அந்த குடியிருப்பில் வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.

    காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அந்த மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்த சிறுமி பேசுவாராம்.

    இதை பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் மேலும் 5 காவலாளிகளின் காமப்பசிக்கு இரையாக்கப்பட்டு இருக்கிறாள். அக்குடியிருப்பின் மொட்டை மாடி பகுதியிலும், ‘லிப்ட்’டுக்குள் வைத்தும் இந்த காம கொடூரர்கள் அந்த சிறுமியை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தோடு விடாமல் அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் என்று மொத்தம் 16 பேர் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

    இந்த விஷயம் அரசல்புரசலாக அச்சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சிறுமியிடம் அவர்கள் விசாரித்தபோது அழுதுகொண்டே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்து தெரிவித்தார். அந்த சிறுமி கூறிய முதல் தகவலில், ஒரு காவலாளியின் பெயரையும், ‘லிப்ட்’ இயக்கும் ஊழியர்கள் இருவரின் பெயரையும் மட்டுமே தெரிவித்தார். அவர்கள் மீது அந்த சிறுமியின் தந்தை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    உடனடியாக அந்த 3 காம கொடூரன்களையும் அயனாவரம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களை விசாரித்தபோது தான், மொத்தம் 16 பேர் அந்த சிறுமியை சீரழித்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து 13 பேரையும் அயனாவரம் போலீசார் அதிரடியாக பிடித்தனர்.

    பிடிபட்ட 16 பேரில் நேற்று இரவு முதல் கட்டமாக 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைதானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. சுரேஷ் (32) பிளம்பர், 2. அபிஷேக் (23) காவலாளி, 3. சுகுமாரன்(60) காவலாளி, 4. ரவிக்குமார்(64) லிப்ட் ஊழியர், 5. இரால் பிரகாஷ்(40) காவலாளி, 6. ராஜசேகர்(40) வீட்டு வேலைக்காரர்.

    மீதம் உள்ள 10 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பிடிபட்ட 16 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சந்திரிகா விசாரித்தார். ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணையும் நேற்று மாலை நடந்தது. சிறுமி கூறிய தகவல்களை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார். இந்த மாபாதக செயலில் ஈடுபட்ட 16 பேரிடமும் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடக்கிறது. மாஜிஸ்திரேட்டு அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கற்பழிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரி வெளிமாநிலத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரிடம் தான் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தகவல் சொல்லி அழுது இருக்கிறார்.

    அதன் பிறகு தான் சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரியவர அவர்கள் போலீசில் புகார் கூறி உள்ளனர். 
    Next Story
    ×