search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி
    X

    யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி

    சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்ற மாணவன் யாசினை நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்திற்கு அழைத்து சந்தித்து பேசினார். #Rajinikath #Yasin
    சென்னை:

    ஈரோடு கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துணி வியாபாரியின் மகனான முகமது யாசின் தற்போது சின்ன சேமூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் அருகே ரோட்டில் 500 ரூபாய் பணம் கட்டு கிடந்ததைப் பார்த்த முகமது யாசின், அதை எடுத்து ஆசிரியையிடம் ஒப்படைக்க ஆசிரியை வழியாக அந்தப் பணம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றது.

    ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முகமது யாசின் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை எடுத்துச் சென்று குடும்பத்தினரிடம் கொடுத்து செலவு செய்திருக்கலாம். ஆனால், பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட முகமது யாசின் அந்தப் பணத்தை எடுத்து கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கூறியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

    இந்த அற்புதமான செயலே முகமது யாசினை தற்போது ஈரோடு மக்கள் அனைவரும் அறியும் ‘ரியல் ஹீரோ’வாக மாற்றி விட்டது. அவரது இந்த நேர்மையான செயலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டு குவிகிறது. பலரும் அவருக்கு உதவ தயார் ஆனார்கள். ஆனால் அதிலும் பெருந்தன்மை காட்டி அந்த உதவிகளை ஏற்காமல் உதவி செய்வதாக கூறியவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவிக்கிறார்கள் முகமது யாசினும், அவரது பெற்றோரும்.

    தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம், ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என யாசின் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக இந்த செய்தி ரஜினிகாந்தை எட்டியது. அவரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை யாசின் தனது குடும்பத்தோடு சந்தித்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “யாசினின் செயல் பாராட்டுக்குரியது. அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எதிர்க்காலத்தில் அவர் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாரோ, அதற்கு உதவி செய்வேன். யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்”என கூறினார்.

    மேலும், சிறுவன் யாசினுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.

    சந்திப்புக்கு பின்னர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழி சாலைகள் அவசியம். மற்ற மாநிலங்களை விட தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. தமிழருவி மணியன் என்னுடன் இணைந்து செயல்பட்டால் நான் வரவேற்பேன்” என ரஜினிகாந்த் கூறினார்.
    Next Story
    ×