search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில சுயாட்சியை மத்திய அரசு பறிக்கவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
    X

    மாநில சுயாட்சியை மத்திய அரசு பறிக்கவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

    மாநில சுயாட்சியை மத்திய அரசு பறிக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 பெரிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா வளர்ச்சியில் 6-வது இடத்திற்கு வந்துள்ளது. ஜி.எஸ்.டி.யில் மிகப்பெரிய தொகை கிடைத்த மாநிலங்களில் தமிழகம் உள்ளது. ஓராண்டில் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வர உள்ளது. மத்திய-மாநில அரசு உறவு சுமுகமாக இருந்தால் தான் மக்களுக்கு திட்டங்களை கொண்டு வரமுடியும்.

    தி.மு.க.-காங்கிரஸ் அரசு இருந்தபோது நல்ல திட்டங்களை கொண்டுவரவில்லை. தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி தந்துள்ளதாக அமித்ஷா கூறி உள்ளார். தமிழுக்கு முன்னுரிமை தந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் இந்தியில் பேசப்பட்டது. அமித்ஷா இந்தியில் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ளக்கூடாது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது.

    ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தார்மீக உரிமை இல்லை. இவர்கள் ஊழலில் திளைத்தவர்கள். தமிழகத்திற்கு வருபவர்களை திரும்பிப்போ என்று சொல்வது தமிழ் கலாசாரம் கிடையாது. மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக கூறும் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஜி.எஸ்.டி.யில் புதுச்சேரிக்கு ரூ.1,400 கோடி வந்திருப்பதாக கூறியுள்ளார். மாநில சுயாட்சி எங்கும் பறிக்கப்படவில்லை. மாநில அரசுகளின் நிலைகளை கேட்டு தான் எந்த திட்டமும் நிறைவேற்றப்படுகிறது.

    போலி பகுத்தறிவுவாதி என்று கூறுவது சினிமா விமர்சனம் இல்லை, அரசியல் விமர்சனம். தமிழகத்தில் எந்த தாமரை மலரப்போகிறது என்று கேட்கிறார். ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கே இந்த அளவிற்கு எண்ணம் இருந்தால் 21 மாநிலங்களில் ஆண்டு கொண்டு இருக்கிற கட்சிக்கு எண்ணம் இருக்காதா? எனக்கு உரிமையில்லை என்று சொல்வதற்கு அவருக்கு உரிமை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×