search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல் - துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம்
    X

    கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல் - துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம்

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை அறிவித்தார். #KamalParty #KamalHoistsFlag #MakkalNeedhiMaiam
    சென்னை:

    அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் மதுரையில் மாநாடு நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.

    கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கேவலு அறிவிக்கப்பட்டார்.

    மகேந்திரன், அருணாசலம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், கமீலா நாசர், சவுரி ராஜன், ராஜசேகரன், சி.கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜ நாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோரை உயர்மட்டக் குழு பொறுப்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரத்துக்காக டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. அதை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தது.

    இதையடுத்து முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.

    இதற்காக கட்சி அலுவலகம் முன் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையைச் சுற்றிலும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கூடி இருந்தனர். நடிகர் கமல்ஹாசன் காலை 11 மணிக்கு மேடைக்கு வந்தார்.

    அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற பின்பு நடைபெறும் இந்த கொடியேற்ற பெரு நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    பின்னர் மேடையில் இருந்தவாறு அருகில் கம்பத்தில் இருந்த கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து அவர் பேசுகையில், “கட்சியின் உயர்நிலைக்குழு கலைக்கப்பட்டு புதிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா என்ற சுரேஷ், செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ண குமார், குமாரவேல், மவுரியா, மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரி ராஜன், தங்கவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

    கொடியேற்றி வைத்து கமல்ஹாசன் பேசுகையில் கூறியதாவது:-

    இன்று நம் அனைவருக்கும் மிக முக்கியமான நாள். மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நமது உயர்நிலைக் குழு கலைக்கப்படுகிறது.

    அக்குழுவில் சிறப்பாக தன்னலம் பாராமல் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்காக உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு, உள்ளச்சுத்தியுடன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நமது உயர்நிலைக் குழு உறுப்பினர்களான ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமர வேல், ஏ.ஜி.மவுரியா, எஸ். மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், ஆர்.தங்கவேல் ஆகியோர் இனி மக்கள் சேவையை மகத்தாக செய்து முடிப்பதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இன்று முதல் செயல்படத் தொடங்கி கட்சியினை வழி நடத்துவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொண்டர்களும், மற்ற நிர்வாகிகளும் இவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரும், தொகுதி வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    கொடியேற்று விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் கார் வாகனங்களில் வந்ததால் ஆழ்வார்பேட்டை சிக்னலில் கடும் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் ஸ்தம்பித்து நின்றன. #KamalParty #KamalHoistsFlag #MakkalNeedhiMaiam #MNMFlagHoist
    #MNMHeadquaters 
    Next Story
    ×