search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது- முத்தரசன்
    X

    அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது- முத்தரசன்

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தில் எதிர் கட்சிகள் கூறும் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. ஊழல் நிறைந்த துறைகளாக இருக்கும் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவைகள் இந்த சட்டத்திற்கு பொருந்தாது என்று கூறி இருப்பதன் மூலம் உள்நோக்கத்தோடு சட்டத்தை அரசு நிறைவேற்றி உள்ளது. இதனால் எந்த மாற்றமும் ஏற்படபோவது கிடையாது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த ஒரு நீதிபதிக்கு மிரட்டல் வந்து உள்ளது ஆபத்தானது. இது அந்த நீதிபதிக்கு அளிக்க கூடிய மிரட்டல் அல்ல, வழக்கை விசாரணை செய்து வரும் 3-வது நீதிபதிக்கு அளிக்கப்பட்ட மிரட்டல். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்திற்கு எந்த அரசியல் மாற்றமும் ஏற்படபோவது கிடையாது. தமிழகத்தில் திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் இருக்கும் வரை பா.ஜ.க.வின் கனவு பலிக்காது. ஊழல் குறித்து அமித்ஷா கூறியுள்ளார். அந்த கருத்தை கூற அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன தவறு என்று நீதிமன்றம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.

    விடுதலைப்புலிகள் குறித்து இலங்கை பெண் மந்திரி கூறியிருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கும் குற்றச்சாட்டிற்கு, முதல்-அமைச்சர் பதில் அளிக்காமல் இருப்பதன் மூலம் மத்திய மந்திரி கூறும் கருத்து உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்ததால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றம் தவறான 49 கேள்விகளுக்கும் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதனை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் மேல் முறையீடு செய்யாமல் நடைமுறைப் படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×