search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமா பாணியில் திருமணம் - ரெயிலில் பெற்றோருடன் சென்ற காதலியை இழுத்து சென்ற வாலிபர்
    X

    சினிமா பாணியில் திருமணம் - ரெயிலில் பெற்றோருடன் சென்ற காதலியை இழுத்து சென்ற வாலிபர்

    காட்பாடி ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சினிமா பட பாணியில் பெற்றோருடன் ரெயிலில் இருந்த காதலியின் கையை பிடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    சென்னையில் இருந்து ஆலப்புழா- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.45 மணியளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் இருந்த ஒரு பெட்டியில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்திருந்தார்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் அந்த பெட்டியில் ஏறி இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். இதைப் பார்த்த இளம் பெண்ணின் தந்தை அந்த வாலிபரை தடுக்க முயற்சித்தார். ஆனால் அவரை தள்ளிவிட்டார். இதனால் அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் இளம்பெண்ணை அந்த வாலிபர் இழுத்துக் கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

    தொடர்ந்து பிளாட்பாரத்திலிருந்து இளம்பெண்ணை இழுத்தபடி ஓட்டம் பிடித்தார். இளம் பெண்ணும் அவருடன் ஓடி சென்றார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இளம் பெண்ணை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்கின்றனர் என கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் வாலிபரை விரட்டி சென்றனர். அவர்களை காட்பாடி- குடியாத்தம் சாலையில் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் ஸ்வேதா (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராயடு (24) என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த ஸ்வேதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி ஸ்வேதாவும், ராயடுவும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    இதனை அறிந்த பெற்றோர், ஸ்வேதாவை வெளியே விடாமல் வீட்டிலேயே பூட்டி வைத்தனர். மேலும் ராயடுவுடன் பேசுவதை தடுக்க அவரது செல்போனையும் பறித்துக் கொண்டனர். காதலனை சந்திக்க முடியாமல் பரிதவித்த ஸ்வேதா ஒருகட்டத்தில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர்.

    பட்டதாரிகளான இருவரும் தங்களுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணத்தை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம் என்றும், அதுவரை இருவரும் தங்களது பெற்றோருடன் தங்கியிருப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி இருவரும் அலைபாயுதே சினிமா பாணியில் தங்களது பெற்றோருடன் தங்கினர். அவ்வப்போது நண்பர்கள் உதவியுடன் சந்தித்து பேசி வந்தனர். ஸ்வேதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர் அவரை கண்காணிக்க தொடங்கினர். அதில் ஸ்வேதா மீண்டும் ராயடுவுடன் பேசி வருவதை அறிந்தனர்.

    இதனிடையே ஸ்வேதாவின் உறவினர் பெண் ஒருவருக்கு வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. அவரை கல்லூரியில் சேர்க்க லட்சுமி அவரது கணவர் ஆகியோர் வேலூர் வர முடிவு செய்தனர். உடன் ஸ்வேதாவையும் அழைத்து வந்தனர்.

    ராஜமுந்திரியில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயில் காட்பாடி நோக்கி வந்தனர். முன்னதாக ராயடுவை செல்போனில் ரகசியமாக தொடர்பு கொண்டு பேசிய ஸ்வேதா தன்னை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி ராயடு தனது நண்பர்கள் 10 பேருடன் அதே ரெயிலில் வேறு பெட்டியில் பயணம் செய்தார்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் ஸ்வேதா தனது பெற்றோருடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ராயடு, சினிமா பாணியில் ஸ்வேதாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடியது தெரியவந்தது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் சட்ட விதிகளின்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை காண்பித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் ஸ்வேதாவின் பெற்றோரிடம் சமாதானம் பேசினார். பின்னர், காதல் தம்பதியை பாதுகாப்பாக ராஜமுந்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×