search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே பூ வியாபாரியை கத்திரிக்கோலால் குத்திய வாலிபர் கைது
    X

    ஒரத்தநாடு அருகே பூ வியாபாரியை கத்திரிக்கோலால் குத்திய வாலிபர் கைது

    ஒரத்தநாடு அருகே பூ வியாபாரியை கத்திரிக்கோலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (வயது 38). இவர் அப்பகுதி கடைவீதியில் பூக்கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலை புத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவர் சூரியகாந்தி பூக்கடைக்கு வந்தார். அப்போது மாலை என்ன விலை? என்று கேட்ட போது விலை அதிகமாக உள்ளதாக தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாலையை வாங்கி விட்டு அரவிந்தன் சென்று விட்டார்.

    பிறகு சுமார் அரைமணி நேரம் கழித்து அரவிந்தன் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சூரியகாந்தி கடைக்கு வந்தார். மீண்டும் அவரிடம் தகராறு செய்தார்.

    ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அரவிந்தன், மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் சூரிய காந்தியை சரமாரியாக தாக்கினர். அப்போது ஆத்திரத்தில் கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அரவிந்தன், சூரியகாந்தியின் கண் அருகே குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பிறகு அக்கம்பக்கத்தினர் சூரியகாந்தியை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி சூரியகாந்தி கொடுத்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அரவிந்தனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் 4 பேரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×