search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எங்களது அடிப்படை வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வசதி இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு, நாங்களும், எங்களை சுற்றியுள்ள குடும்பங்களும் பயன்பெற முடியும். எங்கள் கிராமத்தின் நிலையை கருத்தில் கொண்டு எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, கல்வி உதவித்தொகை என கடந்த 22 ஆண்டுகளாக செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 22 ஆண்டுகளாக டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறோம். இந்த ஆலை மூலமாக எங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் நிலையில், பல்வேறு அன்னிய சக்திகளின் தூண்டுதலின் காரணமாக போராட்டம் நடைபெற்று வன்முறையாக மாறியது. இதையடுத்து ஆலை மூடப்பட்டது. தூத்துக்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன. அவை அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரதாது, ராக்பாஸ்பேட், நிலக்கரி, தாதுமணல் ஆகியவற்றை கையாள பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த ஆலையை சார்ந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல பிரச்சினைகளில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த ஆலையில் வேலை செய்த நாங்கள் நல்ல உடல்தகுதியுடன் தான் உள்ளோம். ஆனால் வதந்திகளால் மக்கள் உணர்வு தூண்டப்பட்டு பலரின் வேலை பறிபோகும் அளவிற்கு போராட்டம் நடந்தது. ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரக்கேடு விளைவிக்கும் செயலை செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அன்னிய சக்திகள் எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. எங்கள் வாழ்வாதாரம் மீண்டும் மலர ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×