search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு - புகாரை திடீர் என்று வாபஸ் பெற்றதால் பரபரப்பு
    X

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு - புகாரை திடீர் என்று வாபஸ் பெற்றதால் பரபரப்பு

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் போலீசில் கொடுத்த புகாரை திடீர் என வாபஸ் பெற்றுவிட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசிக்கின்றனர். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி நேற்று முன்தினம் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி மறைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த திருட்டு வழக்கில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வெண்ணிலா, விஜி ஆகியோர் உடன்பிறந்த சகோதரி ஆவார்கள். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், நகைகள் மற்றும் பொருட்கள் திருடிய குற்றத்தை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகலில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும், வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×