search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை அருகே தடுப்பு கல்லை உடைத்து ஆற்றில் மணல் திருட்டு
    X

    மானாமதுரை அருகே தடுப்பு கல்லை உடைத்து ஆற்றில் மணல் திருட்டு

    மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தில் வைகை ஆற்றின் தடுப்பு கல்லை உடைத்து மர்ம நபர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை வட்டாரத்தில் விடிய, விடிய நடக்கும் மணல் திருட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மானாமதுரையில் அரசு மணல் குவாரி இல்லாததால் பலரும் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் வசிக்கும் பலரும் அதிகாரிகளை சரிகட்டி மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் வைகை ஆற்றில் இறங்கும் கும்பல் விடிய, விடிய மணலை அள்ளி பக்கத்து கிராமங்களில் குவித்து வைத்து பகலில் லாரிகள் மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்துகின்றனர்.

    குறிப்பாக கல்குறிச்சி, ஆலங்குளம், கரிசல்குளம், வேதியரேந்தல், கீழமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டு அதிகம் நடந்து வருகிறது. இதற்கிடையில் மானாமதுரை பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் மணல் திருட்டு அதிகாரிகள் உடந்தையுடன் படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மானாமதுரையை அடுத்த கால்பிரவு அருகே மணல் திருட்டு நடக்காமல் இருக்க ஆற்றையொட்டி தடுப்பு கற்களை வைத்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தடுப்பு கற்களை உடைத்து மர்ம நபர்கள் லாரியை கொண்டு மணல் அள்ளி சென்றுள்ளனர். இது அப்பகுதி விவசாயிகளிடையே மேலும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மணல் திருட்டை தடுக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து தாசில்தார் சுந்தராஜனிடம் கேட்டபோது, தடுப்புகள் அமைத்தும் அதனை உடைத்து மணல் அள்ளிச் செல்கின்றனர். இதற்கு மேல் என்னதான் செய்யமுடியும். யார் அள்ளினார்கள் என்று விசாரித்து வருகிறோம் என்றார்.

    விவசாயிகள் கூறுகையில், மணல் திருட்டால் வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதுடன், விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனை தடுக்க சிறப்புக்குழுக்கள் மூலம் கண்காணித்து மணல் திருடுவோர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    Next Story
    ×