search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக்கூடாது - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    கோவை அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக்கூடாது - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    கோவை பி.என்.புதூரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேலு, கிளை செயலாளர் சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர், குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.புதூர் சென்னிமலை ஆண்டவர் நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, தேவையற்ற அசம்பாவிதங்களும் ஏற்படும்.

    மேலும் மதுக்கடை திறக்கப்பட உள்ள இடத்தின் அருகே மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கோவை கவுண்டம்பாளையம் உடையார் வீதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

    நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக மண் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இதனை நம்பி 40 குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 யூனிட் களிமண் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் நாங்கள் கணுவாய், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து மண்பானை செய்தோம். தற்போது எங்களுக்கு களிமண் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு களிமண் எடுக்க நிரந்தர அனுமதி சான்று வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மீது சிலர் கடந்த மாதம் 30-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் பதிவு செய்யப்பட்டும் குற்றவாளி கைது செய்யப்பட வில்லை.

    டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைந்த பார்களின் உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்கின்றனர். இதனை எதிர்க்கும் மதுக்கடை ஊழியர்கள் மீது சில நபர்களை தூண்டி விட்டு தாக்குதல் நடத்துகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் டாஸ்மாக் பார்களின் உரிமையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உள்ளது.

    கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு (வயது 39) என்பவர் அளித்த மனுவில், சிறு வயதில் ஏற்பட்ட நோய் காரணமாக எனது 2 கால்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளியான எனக்கு வடவள்ளி பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இருந்தது.

    கோவை அருகே உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அளித்த மனுவில், நாங்கள் தொழிற்சங்கத்தில் முன்னணி நிர்வாகிகளாக இருந்ததால் எங்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 
    Next Story
    ×