search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் - மேலாளர் தகவல்
    X

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் - மேலாளர் தகவல்

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடங்கள், என்ஜின் டிரைவர்களின் கட்டுப்பாட்டு அலுவலகம், ரெயில்வே தண்டவாளங்கள், நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மேலாளர் பார்வையிட்டு, ரெயில்வே ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நான் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளராக பொறுப்பேற்ற பிறகு ஈரோடு ரெயில் நிலையத்திற்கு முதல் முறையாக வந்து ஆய்வு செய்தேன். இங்கு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு லிப்ட் அடுத்த மாதம் ஜூலை 15-ந் தேதிக்குள் திறக்கப்படும். மற்றொரு லிப்ட் 3 மாதங்களில் அமைக்கப்படும். நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும்.

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகளில் ஆட்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அடுத்த மாதத்திற்குள் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகள் இருக்காது. பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஒருசில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும்.

    ஈரோடு-திருச்சி மார்க்கத்தில் மின்சார என்ஜின்கள் இயக்குவதற்காக மின்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதியில் இருந்து 7 ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலமாக இயக்கப்பட உள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் 4 நடை மேடைகள் உள்ளன. அனைத்து ரெயில்களும் சுமார் 10 நிமிடங்கள் வரை நிற்கின்றன. இதனால் நடைமேடைகளில் ஒரு ரெயில் நின்றிருக்கும்போது, மற்றொரு ரெயில் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நடைமேடைகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை தற்போது இல்லை.

    ரெயில்வே தண்டவாளங்களில் அபாயகரமான இடங்களில் நின்று செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்கிற ஆணை இன்னும் வரவில்லை. இதற்கான ஆணை வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் கூறினார்.
    Next Story
    ×