search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
    X

    மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

    மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Jayalalithaamemorial
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை, உலகிலேயே 2-வது நீளமான கடற்கரை ஆகும்.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மெரினா கடற்கரையை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சுடுகாடாக மாற்றி வருகிறது. அதாவது, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறது.

    இந்த நினைவிடம் கட்டுவதற்கு, தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை நிர்வாக ஆணையம் மற்றும் சுற்றுச் சூழல் இயக்ககத்தின் உறுப்பினர் செயலாளர் அனுமதி வழங்கி கடந்த மார்ச் 16-ந் தேதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நினைவிடம் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர், அதாவது 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை கேட்டு மார்ச் 14-ந் தேதி தான் தமிழ் வளர்ச்சித்துறை மனு கொடுத்துள்ளது. அந்த மனுவை சட்டப்படி பரிசீலிக்காமல், இரண்டே நாளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அனுமதியை வழங்குவதற்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடமும், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடமும் ஒப்புதல் பெறவில்லை. அனைத்து விதிகளையும் மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.



    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு அதிகமான பகுதியில் கட்டுமானம் (நினைவிடம்) கட்டினால் மட்டுமே மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் நினைவிடம் 5,571 சதுர மீட்டர் பரப்பளவில் தான் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியை பெறத்தேவையில்லை’ என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் வக்கீல் வி.இளங்கோ வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #Jayalalithaamemorial
    Next Story
    ×