search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனது பாதையை முடிவு செய்து விட்டேன் - காங்கிரஸ் உடன் கூட்டணியா? கேள்விக்கு கமல் பதில்
    X

    எனது பாதையை முடிவு செய்து விட்டேன் - காங்கிரஸ் உடன் கூட்டணியா? கேள்விக்கு கமல் பதில்

    டெல்லியில் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசிய பின்னர் நேற்று இரவு சென்னை திரும்பிய கமல்ஹாசன் காங்கிரசுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் அளித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் களத்தில் வேகம் காட்டி வருகிறார். மதுரையில் பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய கமல், பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

    கிராமப்புறங்களில் கட்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ள கமல் தேசிய தலைவர்களை அடிக்கடி சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது கட்சி பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், அப்பணிகளை முடித்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திடீரென சந்தித்து பேசினார். பின்னர் ஒருநாள் டெல்லியிலேயே தங்கி இருந்து நேற்று காலையில் சோனியா காந்தியையும் சந்தித்தார்.



    தமிழக அரசியல் நிலவரம் குறித்து சோனியா-ராகுல் இருவரிடமும் கமல் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது தனது புதிய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலப்பணிகள் பற்றி கமல் எடுத்துக் கூறினார். அதனை சோனியா-ராகுல் இருவருமே கவனமுடன் கேட்டுக் கொண்டனர். தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் விவாதித்தனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில் சோனியா-ராகுல் இருவரையும் கமல் சந்தித்து பேசி இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து அக்கட்சி இப்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டதாகவும் அதன் எதிரொலியாகவே இந்த சந்திப்பு நடந்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கைகோர்த்து செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் இது தொடர்பாக பேட்டி அளித்தார்.

    கே:- டெல்லியில் சோனியா-ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசி இருப்பது காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமா?

    ப:- சோனியா, ராகுல் காந்தி இருவரையும் மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசினேன். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். நீங்கள் நினைப்பது போல கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் நான் ஒருவழி பாதையில் செல்வதாக நினைத்து விட வேண்டாம். எனது பாதை எது? என்பதை நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன்.

    கே:- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுமா?

    ப:- அது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்பேன்.

    கே:- காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

    ப:- காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் அனைத்து முடிவுகளும் வித்தியாசமானதாகவே உள்ளது. அதனை ஒவ்வொரு முறையும் விமர்சித்து கொண்டேதான் இருக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம். காவிரி ஆணையத்தை முறையாக செயல்படுத்த நாம் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். எல்லா விதமான அழுத்தங்களையும் தர வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் உண்மையிலேயே வெற்றி விழாவை கொண்டாட வேண்டியவர்கள் விவசாயிகள்தான். நாம் அதனை வழிமொழிய வேண்டும். அதற்கு முன்னாடியே அ.தி.மு.க. அரசு சாவிக்கு ஆசைப்படுவதையே காட்டுகிறது. டெல்லி சென்றிருந்த போது அரவிந்த் கெஜ்ரிவால் வெளியூர் சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.

    இவ்வாறு கமல் கூறினார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இப்போதைய சூழலில் காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை அந்த கூட் டணியில் உள்ளன.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு காங்கிரசுக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்ததே காரணம் என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே இருந்தது.

    வரும் தேர்தலில் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தி.மு.க. உறுதியுடன் உள்ளது. இந்த மாதிரியான சிக்கலை தாண்டியே எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதிய கட்சிகளால் தமிழகத்தில் காட்சிகள் மாறி உள்ளன. அதனை தங்களுக்கு சாதகமாக்க முடியுமா? என்றும் காங்கிரஸ் கணக்கு போட தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே ராகுல்-கமல் சந்திப்பு நடந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    கமல்ஹாசனைச் சந்தித்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல், தங்களது சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசியல் சூழல் உட்பட, இரு கட்சிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் கடந்த மாதம் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது பேட்டி அளித்த அவர் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்று கூறி இருந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக்கையும் திருமாவளவன் சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே அனைத்து கட்சிகளும் காய் நகர்த்த தொடங்கி உள்ளன. திருமாவளவன், ராகுலை சந்தித்து பேசியதும் அந்த அடிப்படையில்தான். கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமலேயே தி.மு.க. தேர்தலை சந்தித்தது. பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலிலேயே 2 கட்சிகளும் கைகோர்த்தன. இந்த கூட்டணியே நீடித்து வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கேட்டுப் பெற்ற காங்கிரஸ் கட்சியே தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த எண்ணிக்கை விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுபோன்று போட்டியிடும் இடங்களை ஒதுக்கும் வி‌ஷயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால் தமிழகத்தில் தனது தலைமையில் புதிய அணியை உருவாக்கவும் காங்கிரஸ் தயங்காது என்றே தெரிகிறது.

    இதன் ஆரம்ப புள்ளியே ராகுல்-கமல் சந்திப்பு என்கிற கருத்து பரவலாகி உள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கான பரபரப்பு தீயை காங்கிரஸ் முன் கூட்டியே பற்ற வைத்துள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam

    Next Story
    ×