search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை - சேலம் விரைவு சாலைக்கு 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு
    X

    சென்னை - சேலம் விரைவு சாலைக்கு 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு

    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைக்காக அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. #GreenWayRoad
    சென்னை:

    சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழி பசுமை சாலை பணிகள் தீவிரம் அடைய தொடங்கியுள்ளன. 277 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை மிக மிக நவீனமாக சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. இதற்காகவே மத்திய அரசு இந்த சாலை திட்டத்துக்கு ரூ.10 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக இந்த பாதை உருவாக உள்ளது. மொத்தம் 14 தாலுக்காக்களில் உள்ள 159 கிராமங்களை தொட்டுக் கொண்டு இந்த 8 வழி பசுமை சாலை கடந்து செல்லும்.

    இந்த சாலை காரணமாக சென்னை-சேலம் இடையே போக்குவரத்து நேரம் பாதியாக குறையும். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியும்.

    இதன் காரணமாக எரிபொருள் சிக்கனம், நேர சிக்கனம் உள்பட பல்வேறு பயன்கள் கிடைக்கும். குறிப்பாக சரக்கு போக்குவரத்துக்கு இந்த சாலை மிகவும் கைகொடுக்கும் என்று மத்திய- மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த 8 வழி பசுமை சாலைக்கான நிலம் ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்டது. 5 மாவட்டங்களிலும் எந்தெந்த பகுதி வழியாக இந்த சாலை செல்லும் என்பது ஏற்கனவே அறிவிக்கைகள் மூலம் கூறப்பட்டு விட்டது.

    தேசிய நெடுஞ்சாலை 179-ஏ, 179-பி என்று இந்த சாலைக்கு பெயரிடப்பட உள்ளது. இந்த சாலைக்கு 5 மாவட்டங்களில் இருந்தும் அரசு நிலங்களும், தனியார் நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.


    அதிகபட்சமாக திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இரு மாவட்டங்களில் இருந்தும் வனத்துறைக்கு சொந்தமான 9 இடங்களில் இருந்து நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 74 கிராமங்களை ஊடுருவியபடி இந்த சாலை அமைய உள்ளது. இதனால் 74 கிராம மக்களும் கணிசமான நிலத்தை இழக்கக்கூடும்.

    மத்திய-மாநில அரசுகளின் அறிவிக்கையின் படி இந்த திட்டத்துக்கு அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி விட்டன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, செங்கம், வந்தவாசி, செய்யாறு, போளூர் பகுதிகளில் இருந்து அதிகப்படியான புறம்போக்கு நிலங்கள் பயன்படுத்தப்படும்.

    8 வழி சாலை திட்டத்துக்கு அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர தனியார் நிலங்களும் அதிக அளவில் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக விவசாய நிலங்கள் சில ஆயிரம் ஏக்கர்கள் பறிபோக உள்ளன. மொத்தம் 7 ஆயிரத்து 237 பேருக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இதில் சுமார் 6 ஆயிரம் பேர் முழுக்க முழுக்க அந்த விவசாய நிலங்களையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விவசாயிகள் இந்த பாதிப்பை ஏற்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பதில் இந்த சாலை வழியாக தொழில்கள் மேம்படும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக அலுமினியம், சிலிக்கான், கண்ணாடி, செராமிக், சிமெண்டு தொழில்கள் வளர்ச்சி பெறும் என்று கணக்கிட்டுள்ளனர்.

    தொழில் வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை இழக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகையை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து கொடுக்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரு.3 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிலத்தை பறிகொடுக்கும் உரிமையாளர்கள் அதற்கான சட்டப்பிரிவு 3சி(1) பிரிவின் கீழ் இழப்பு தொகையை பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிட்ட 21 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம் கையகப்படுத்துதல்), தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் விண்ணப்பித்து தங்களது ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பிறகு விவசாயிகளின் நிலத்திற்கு ஏற்க இழப்பீடு தொகை 2 மடங்கு அதிகமாக கொடுப்பதா? அல்லது 3 மடங்கு அதிகமாக கொடுப்பதா? என்பது பற்றி அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    ஆனால் நிலத்தை இழக்கும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் இழப்பீடு தொகை பெற விரும்பவில்லை. தங்களது நிலத்தையும் விட்டுக் கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. வாழ்வாதார பூமியாக இருப்பதால் மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

    ஆனால் சென்னை- சேலம் இடையே செயற்கை கோள் மூலம் 8 வழி பசுமை சாலைக்கான இடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதால் இந்த வழித்தடத்தை மாற்ற இயலாது என்று அரசு கூறியுள்ளது.  #GreenWayRoad
    Next Story
    ×