search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம், தனுஷ்கோடியில் சூறாவளி - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீடிப்பு
    X

    ராமேசுவரம், தனுஷ்கோடியில் சூறாவளி - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீடிப்பு

    ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு நீடித்து வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ் கோடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் அலைகள் பல அடி உயரத்துக்கு எழுகின்றன. இதன் காரணமாக மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் வானிலை ஒத்துழைக்காததால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்தது.

    மேலும் மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை. ஆனாலும் தடையை மீறி ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு சென்று வருகின்றனர்.

    ராமேசுவரம், பாம்பனில் நேற்று மாலை வழக்கத்தை விட பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் போக்குவரத்து மட்டுமின்றி ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் ரெயில்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால் வழக்கம் போல் மாலை 5 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 4½ மணி நேர தாமதத்திற்கு பின் 9.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    இதேபோல் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலும் 2 மணி நேரம் தாமதமாக சென்றது. சூறாவளி காற்று காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயிலும் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பஸ்களில் ராமேசுவரம் சென்றனர்.

    இன்று காலையும் ராமேசுவரம், தனுஷ் கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு நீடித்து வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம், பாம்பனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வார காலமாகவே வானிலை மோசமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×