search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    வில்லியனூரில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

    வில்லியனூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போன்கள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    சுல்தான் பேட்டை நடுத் தெருவை சேர்ந்தவர்முகமது யாகூப் (வயது 42). இவர் வில்லியனூர்-பெரம்பை செல்லும் சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ராமபரதேசி சாமி சித்தர் கோவில் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் முகமது யாகூப் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை 6 மணிக்கு பக்கத்து கடைக்காரர் கடையை திறக்க வந்த போது செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷெட்டர் கதவு திறந்து கிடந்ததை கண்டார்.

    முகமது யாகூப்புக்கு இதுபற்றி அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பதறியடித்துக் கொண்டு கடைக்கு வந்தார். அப்போது கடையின் 3 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த விலை உயர்ந்த 6 செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள் மற்றும் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு முகமது யாகூப் திடுக்கிட்டார்.

    கொள்ளை போன செல்போன்கள், ரீசார்ஜ் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.75 ஆயிரமாகும்.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டுகளை உடைத்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து முகமது யாகூப் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த இடம் எப்போதும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.

    மேலும் செல்போன் கடை அருகே போக்குவரத்து போலீஸ் நிலையமும் உள்ளது. அவ்வாறு இருக்க மர்ம நபர்கள் துணிச்சலாக பூட்டுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×