search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே ஆசிரியை வீட்டில் 35 பவுன் திருட்டு
    X

    கோவை அருகே ஆசிரியை வீட்டில் 35 பவுன் திருட்டு

    கோவை அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 35 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). தனியார் மில் ஊழியர்.

    இவரது மனைவி சாந்தி. வடபுதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இளைய மகள் சென்னையில் படித்து வருகிறார்.

    நேற்று காலை சாந்தி பள்ளிக்கு சென்று விட்டார். மாலை 3.30 மணி அளவில் துரைசாமி மில்லுக்கு புறப்பட்டு சென்றார். மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்து சாந்தி வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற போது மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள், வைர மோதிரம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருடர்கள் வீட்டின் முன் அறையில் மேஜை டிராயரில் வைத்திருந்த நகைகளை மட்டும் திருடி சென்றுள்ளனர். படுக்கை அறையில் உள்ள பீரோவில் 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. அந்த அறைக்குள் திருடர்கள் செல்லாததால் தப்பியது.

    துரைசாமி இப்போது வசிக்கும் வீட்டையொட்டி புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக ரொக்கப்பணத்தை வீட்டில் வைத்திருந்தாராம். அவர் வேலைக்கு செல்லும் நேரத்தை கண்காணித்து திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். மேலும் சாந்தி பள்ளி முடிந்து 4.30 மணிக்கு வீடு திரும்புவார் என்பதையும் அறிந்தே திருடர்கள் முன்அறையில் இருந்த நகையை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    எனவே இவர்களது வீட்டை பற்றி நன்கு தெரிந்தவர்கள் யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என்று பட்டியல் சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 61). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சின்னமநல்லூருக்கு சென்றார். மறுநாள் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த மனோகரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்தது அதில் இருந்த நெக்லஸ், செயின், மோதிரம் மற்றும் கம்மல் உள்பட 10½ பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மனோகரன் காரமடை போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவுவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×