search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழித்துறை ரெயில்நிலையம் அருகே கட்டிடத் தொழிலாளி குத்திக்கொலை
    X

    குழித்துறை ரெயில்நிலையம் அருகே கட்டிடத் தொழிலாளி குத்திக்கொலை

    குழித்துறை ரெயில்நிலையம் அருகே கட்டிடத் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குழித்துறை:

    குழித்துறை அருகே உள்ள தேனாம்பாறை வண்ணாவிளையைச் சேர்ந்தவர் ஸ்டேன்லி ஜோன்ஸ் (வயது 45). கட்டிடத் தொழிலாளி.  நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜோன்ஸ் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சில நேரங்களில் வெளியே சென்றால் காலையில் தான் அவர் திரும்பி வருவார். அதேபோல் நினைத்து அவரது குடும்பத்தினர் ஸ்டேன்லி ஜோன்சை தேடாமல் இருந்தனர். 

    இந்தநிலையில் இன்று காலை ஜோன்ஸ்,  ஞாறான்விளை பக்கம் உள்ள குழித்துறை மேற்கு ரெயில்நிலையம் அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது. மேலும் உடலில் பல இடங்களில் அரிவாள்வெட்டு காயங்களும் இருந்தன. ஜோன்ஸ் சட்டை மற்றும் உள்ளாடை மட்டுமே அணிந்து அரைநிர்வாண நிலையில் கிடந்தார். 

    காலையில் ரெயில் நிலையம் சென்ற பொதுமக்கள் ஜோன்ஸ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தக்கலை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜோன்சின் பிணத்தை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
    கொலை செய்யப்பட்ட ஜோன்சுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவரை யாராவது கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

    ஜோன்ஸ் அரைநிர்வாண நிலையில் கிடப்பதால் அவரை ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பல் விரட்டி சிறிது தூரம் ஓடியநிலையில் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்து இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜோன்சுடன் மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. அவர்களை பிடித்து விசாரித்தால் கொலைக்கான காரணம் தெரியும் என கூறப்படுகிறது. ஜோன்ஸ் கொலைக்கு குடிபோதை தகராறு தான் காரணமா? அல்லது வேறு எதுவும் பிரச்சினை உண்டா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது. 

    கொலை செய்யப்பட்ட ஜோன்சுக்கு கிறிஸ்டல் பாய் (45) என்ற மனைவியும், மதன்சுபின் (21) என்ற மகனும், சுமிதா (19) என்ற மகளும் உள்ளனர். அவர்கள் ஜோன்சின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 
    Next Story
    ×