search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்தாமரை குளத்தில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை திடீர் மாயம்
    X

    தென்தாமரை குளத்தில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை திடீர் மாயம்

    தென்தாமரைகுளத்தில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெண் வீட்டார் கலக்கத்தில் உள்ளனர்.
    தென்தாமரைகுளம்:

    தென்தாமரை குளத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் தங்ககுமார் (வயது 33). தங்ககுமார் சிவகாசியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பேசி நிச்சயம் செய்தனர். இவர்களின் திருமணம் நாளை (17-ந் தேதி) நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்திற்காக தங்ககுமாரின் பெற்றோர்கள் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்தனர். நேற்று முன்தினம் தங்ககுமார் ஆரல்வாய்மொழியில் உள்ள நண்பர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறினார். இதற்காக ஒரு காரில் நேற்று ஆரல்வாய்மொழி சென்றார். அதன்பிறகு தங்ககுமார் வீடு திரும்பவில்லை. நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் தங்ககுமார் வீடு திரும்பாதது அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் பல இடங்களிலும் தங்க குமாரை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து தங்ககுமாரின் தந்தை ராஜலிங்கம், இது பற்றி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். மேலும் தங்க குமாரின் செல்போன் எண்ணையும் கொடுத்தார். அந்த எண் மூலம் போலீசார் தங்ககுமாரை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இதில் அவரது செல்போன், தஞ்சாவூர் பகுதியில் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் நாகர்கோவிலில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள டோல்கேட்களில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்தனர். இதில் தங்ககுமாரின் கார் அந்த டோல்கேட்களை தாண்டி சென்றிருப்பது உறுதியானது.

    இதையடுத்து புது மாப்பிள்ளை தங்ககுமார் தஞ்சாவூரில் இருப்பதை உறுதி செய்த போலீசார் நேற்றிரவே அவரை தேடி தஞ்சாவூர் புறப்பட்டனர். மேலும் அவர் எதற்காக தஞ்சாவூர் சென்றார் என்றும் விசாரித்தனர்.இதில் தங்ககுமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்ததாகவும்,அந்த பெண் தங்ககுமாரை திருமணம் செய்ய மறுத்ததால், தங்ககுமார் வேறுபெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது.

    தங்ககுமாருக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்த அவரது காதலி, மனம் மாறி அவரை திருமணம் செய்ய இங்கு வந்திருக்கலாம் என்றும், அவருடன் தான் தங்ககுமார் தஞ்சாவூர் சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள். தங்ககுமாரை கண்டு பிடித்த பின்னரே இதற்கான காரணம் தெரியவரும். இதையடுத்து நாளை அஞ்சுகிராமம் பெண்ணுடன் நடக்க இருந்த திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பெண் வீட்டார் கலக்கத்தில் உள்ளனர்.
    Next Story
    ×