search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன், முத்தரசன் பங்கேற்பு
    X

    கடலூரில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன், முத்தரசன் பங்கேற்பு

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி கடலூரில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன், முத்தரசன் பங்கேற்றனர்.

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை அடித்து உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    மேலும் நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வேல் முருகனை விடுதலை செய்யக்கோரி கடலூரில் அனைத்துக்கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்துக்கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.

    பின்னர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திருமால்வளவன் தொடக்கவுரையாற்றினார்.

    இதில் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பெசவான்பாகவி, முன்னாள் எம்.பி. விசுவநாதன்,

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து, திராவிடர் விடுதலை கழகம் தலைவர் குளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர் செல்வன், மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவனர் ஏகாம்பரம் ஆகியோர் பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியதேவன், விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பு செயலாளர் திருமார்பன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் திருமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மணிவாசகம்.

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் ஷேக் தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    முடிவில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×