search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேல்முருகன் கைதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    வேல்முருகன் கைதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    வேல்முருகன் கைதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பிராட்வே:

    சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழர் பேரவை சார்பில் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை அறிந்து தீக்குளித்து இறந்த ஜெகன்சிங் உருவ படத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

    தமிழகத்தின் நலன் காக்க அறவழியில் போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகமாகும். தமிழர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய தமிழக அரசு அறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்றுள்ளது. ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்ற தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு குறியாக உள்ளது. இதற்கு துணையாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மாசுகட்டுப்பாட்டு வாரிய உத்தரவை வைத்து தான் தமிழக அரசு மூடியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, சட்டமன்றத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×