search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிமடம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு
    X

    ஆண்டிமடம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

    ஆண்டிடம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை மற்றும் பணம் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் தூக்கி சென்றனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சுசீலா(60). இவர் விளந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இதனால் பழனிசாமியும், அவரது மனைவி சுசீலாவும் விளந்தை கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2-ந் தேதி மகளை பார்க்க சென்னை சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பழனிசாமியின் வீடு திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒரு அறையில் இருந்த 2 பீரோக்கள் திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. இதுகுறித்து சென்னையில் உள்ள பழனிசாமியை செல்போன் மூலம் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் படுக்கை அறையில் நகைகள், பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு லாக்கர் உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது நகை, பணம் இருந்த இரும்பு லாக்கர் மாயமாகி இருந்தது. மீண்டும் பழனிசாமியை தொடர்பு கொண்ட போலீசார், உடனே புறப்பட்டு வருமாறு கூறினர். அதன்பேரில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டார்.

    மர்ம நபர்கள் வீட்டின் முன்புற இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து, கதவின் தாழ்ப்பாளை வெளியே இருந்து ஜன்னல் வழியாக கம்பியால் நெம்பி உடைத்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களை திறந்து நகை, பணம் உள்ளதா? என்று பார்த்துள்ளனர். அதில், எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் படுக்கை அறைக்கு சென்று நகை-பணம் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாமல் போகவே, இரும்பு லாக்கரை அப்படியே தூக்கி சென்றுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மோப்ப நாய் மலரை வரவழைத்தனர். அது திருட்டு நடந்த வீட்டிலிருந்து ஓடி கொளப்பாடி சாலையில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையில் சென்னையில் இருந்த பழனிசாமி, தனது மனைவி சுசீலாவுடன் நேற்று மாலை ஆண்டிமடத்திற்கு வந்தார்.

    அவரிடம் போலீசார் வீட்டில் திருட்டு போன இரும்பு லாக்கரில் எவ்வளவு நகை, பணம் இருந்தது என்று விசாரித்தனர். லாக்கரில் வீடு மற்றும் நில பத்திரங்கள், 19 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் மற்றும் ¼ கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×