search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி
    X

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

    தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது என்றும், 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது என்றும், 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:-

    கடந்த மே மாதம் 29-ந் தேதி தமிழகத்தின் தென் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இப்போது தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியிலும் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக தொடங்கி உள்ளது.

    அடுத்த 2 நாட்களில் ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை தொடங்க அனைத்து சாதகமான வாய்ப்புகளும் உள்ளன.

    வங்க கடலின் மத்திய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக 2 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி, அரியலூர் 13 செ.மீ., திருவிடைமருதூர் 7 செ.மீ, திருத்துறைப்பூண்டி 5 செ.மீ., ஒகேனக்கல், தாமரைப்பாக்கம், சூளகிரி, சின்னக்கல்லாறு, சேலம், காரைக்கால் தலா 4 செ.மீ., தஞ்சை, உளுந்தூர்பேட்டை, மாரண்ட அள்ளி தலா 3 செ.மீ., வால்பாறை, செந்துறை, காமாட்சிபுரம், குளித்தலை, பாபநாசம், செங்கல்பட்டு, ஊத்தங்கரை, குளச்சல், வலங்கைமான் தலா 2 செ.மீ., திருமானூர், வேடசந்தூர், குந்தாபாலம், கும்பகோணம், குழித்துறை, வையூர், முசிறி, சங்கராபுரம், புதுச்சேரி, ஆத்தூர், ஜெயங்கொண்டம், காஞ்சீபுரம், தர்மபுரி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    Next Story
    ×