search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும்: தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம்
    X

    உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும்: தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம்

    ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #CauveryManagement
    சென்னை:

    ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழில் அறிவிக்கை செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை திறந்து விட மத்திய அரசு அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * காவிரி பிரச்சினைக்காக தன்னெழுச்சியாக போராடிய தமிழக மக்களுக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

    * தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் காவரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு. அணைகளை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து கட்டுப்படுத்தும் தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாமல் கோட்டைவிட்ட அ.தி.மு.க. அரசுக்கும், தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கும் இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    * ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழில் அறிவிக்கை செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை திறந்துவிட மத்திய அரசு அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறப்பது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு உரிய நீரை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

    * குருகுலக்கல்வி என்ற போர்வையில் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சியை அதன் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மத்திய பா.ஜ.க. அரசு இந்த பிற்போக்கு கல்வி திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் பிரசார மற்றும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

    * ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே நீடிக்க வேண்டும். தவறினால் சமூக நீதி கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்த இந்த கூட்டம் முடிவு செய்கிறது.

    போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து நீர் விட வேண்டுமென்று எல்லா கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழக அரசு உடனடியாக அதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை ஆணையத்துக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு இந்த விலை உயர்வை திரும்பப்பெற வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 800 அரசு பள்ளிகளை மூடப்போவதாக அரசு தெரிவித்து இருக்கிறதே? என்று கேட்டதற்கு, ‘தமிழக அரசு எந்தளவுக்கு செயலிழந்து போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாக உள்ளன’ என்றார். 
    Next Story
    ×