search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்: தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்: தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜி.வி.மாதையன் தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, சட்டதிருத்தக்குழு இணை செயலாளர் தாமரைசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு இணை செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 3-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 1,450 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 முகவர்களை நியமித்து அற்கான பட்டியலை தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி அளவில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், சித்தார்த்தன், கோபால், குமரவேல், செல்வராஜ், தேசிங்குராஜன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் முத்துலட்சுமி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். 
    Next Story
    ×