search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாங்காட்டில் 5 டன் குட்கா பதுக்கல்- குடோன் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
    X

    மாங்காட்டில் 5 டன் குட்கா பதுக்கல்- குடோன் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

    மாங்காட்டில் 5 டன் எடை கொண்ட 150 மூட்டைகளில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை சட்ட விரோதமாக விற்கப்படுவதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி குட்காவை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    சமீபத்தில் கோவையில் இயங்கிய குட்கா தொழிற்சாலையை போலீசார் கண்டு பிடித்து ‘சீல்’ வைத்தனர். இந்த நிலையில் மாங்காடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள குடோனில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். மாங்காடு அருகே பரணிபுத்தூரை அடுத்த பெரிய பணிச்சேரியில் உள்ள ஒரு குடோனில் நேற்று இரவு போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு 5 டன் எடை கொண்ட 150 மூட்டைகளில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அங்கிருந்த ஏஜெண்டு முருகன், ஊழியர்கள் தணிகாசலம், செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் குட்கா போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கனகலிங்கம் என்பது தெரியவந்தது.

    குடோன் உரிமையாளரான பரணிபுத்தூரை சேர்ந்த புஷ்பகுமாரிடம் கனகலிங்கம் குடோனை வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் குட்காவை மொத்தமாக வாங்கி பதுக்கி பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார்.

    கனகலிங்கம் குட்காவை பதுக்கியது குறித்து குடோன் உரிமையளர் புஷ்பகுமாருக்கு 3 மாதத்துக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அவர் அதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்கவில்லை.

    கனகலிங்கத்திடம் அதிக வாடகை வாங்கிக் கொண்டு குட்காவை பதுக்க அனுமதித்துள்ளார். இதையடுத்து போலீசார் குடோன் உரிமையாளர் புஷ்பகுமாரையும் கைது செய்தனர்.

    தலைமறைவான மொத்த வியாபாரியான கனகலிங்கம், உடந்தையாக இருந்த அவரது தம்பி தர்மன் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாங்காட்டில் உள்ள இந்த குடோனுக்கு கோவையில் இருந்து குட்கா போதை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. #Tamilnews #Gutkha
    Next Story
    ×