search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூத்துறையில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் கவர்னர்
    X

    பூத்துறையில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் கவர்னர்

    விழுப்புரம் மாவட்டம் பூத்துறை அருகே நடைபெறும் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். #TNGovernor #BanwarilalPurohit
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும் துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்து தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    இதையொட்டி கவர்னருக்கு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று காலை வருகை தந்தார். அவர் சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டிவனம் வழியாக வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்துக்கு 11.35 மணிக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதன்பின்பு அங்கு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் ஆய்வு செய்தார். இதையடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் கிராமப்புற கல்வி மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.

    அங்குள்ள மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகளையும் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கார் மூலம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு ஓய்வு எடுத்தார்.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.

    கவர்னர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்ததையொட்டி டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அனுசுயா டெய்சி எர்னஸ்ட், ராஜராஜன் மற்றும் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கவர்னர் தங்க உள்ள விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  #TNGovernor #BanwarilalPurohit
    Next Story
    ×