search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் ‘கட்ஆப்’ மதிப்பெண் குறைகிறது - 90 ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவு
    X

    என்ஜினீயரிங் ‘கட்ஆப்’ மதிப்பெண் குறைகிறது - 90 ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவு

    பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #Engineering #AnnaUniversity
    சென்னை:

    மாணவர்களின் உயர் படிப்பை நிர்ணயிக்கக்கூடிய பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    231 மாணவர்கள் மட்டுமே 1200-க்கு 1180 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,171 மாணவ- மாணவிகள் டாப் பட்டியலில் இடம் பெற்றனர்.

    1180-க்குமேல் மதிப்பெண் பெற்ற கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் பெரும்பாலும் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 அல்லது 199, 198 மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இந்த வருடம் அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது மேற்குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண் குறைந்திருக்கும் என்பதை தெளிவாக்குகிறது.

    இதன் காரணமாக இந்த வருடம் பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் மார்க் குறையலாம் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர். எனவே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால் பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் கலந்தாய்விற்கு இணையதளம் வழியாக இந்த வருடம் விண்ணப்பிக்கப்படுகிறது.


    பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு சென்னையில் நடத்தப்பட்ட கலந்தாய்வு முறையை மாற்றி ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆன்லைனில் விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவர்கள் சொந்தமாகவே பதிவு செய்து வருகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் எளிதாக பதிவு செய்ய வசதியாக வழிகாட்டுதல் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பே 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    நேற்று தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகிறார்கள். 2 நாளில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரையில் 90 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

    ஆன்லைனில் பதிவு செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும். #Engineering #AnnaUniversity
    Next Story
    ×