search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லங்க சான்றில் உள்ள பிழைகளை சரிசெய்யும் முறை எப்படி?- பத்திரப்பதிவுத்துறை தலைவர் விளக்கம்
    X

    வில்லங்க சான்றில் உள்ள பிழைகளை சரிசெய்யும் முறை எப்படி?- பத்திரப்பதிவுத்துறை தலைவர் விளக்கம்

    சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கிய அல்லது பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த வில்லங்க சான்றில் உள்ள தட்டச்சு பிழைகளை சரிசெய்வது எப்படி என பத்திரப்பதிவுத்துறை தலைவர் விளக்கம் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பதிவுத்துறையில், பதிவுச்சட்டம் 1908-ன் படி ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் அட்டவணை- II இல் தொகுக்கப்பட்டு அதிலிருந்து வில்லங்கச்சான்று விவரங்கள் தேடப்பட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படுகின்றன. சார்பதிவாளர் அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டதில் இருந்து இந்த அட்டவணை- II விவரங்கள் 1987-லிருந்து கணினியில் உட்புகுத்தப்பட்டு வில்லங்கச்சான்று விவரங்கள் 1.1.1987-லிருந்து கணினி மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும், இணையதளம் மூலம் வில்லங்கச்சான்று விவரங்கள் கட்டணமின்றி பார்வையிடவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டு அந்த புதிய வசதி 11.6.2014-ல் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. தினந்தோறும் சராசரியாக 20 ஆயிரம் போ் இந்த வசதியை பயன்படுத்துகின்றனா்.

    வில்லங்கச்சான்று விவரங்கள் 1.1.1975-லிருந்து 31.12.1986 வரை கணினியில் உள்ளீடு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளன. 1.1.1975-லிருந்து தற்போது வரை கணினி மூலம் வில்லங்கச்சான்று வழங்கும் வசதியும், வில்லங்கச்சான்றை 1.1.1975-லிருந்து தற்போது வரை இணையதளம் மூலம் கட்டணமின்றி பாாபார்வையிடவும், பதிவிறக்கம் செய்யவும் தேவையான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியானது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் 12.2.2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 1.1.1975-லிருந்து தற்போது வரை https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் வில்லங்கச்சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வில்லங்கச்சான்றிலும், சார்பதிவாளா் அலுவலகத்தில் வழங்கப்பட்ட வில்லங்கச்சான்றிலும் பெயா், சொத்து விவரம் போன்றவற்றில் ஏதாவது தவறுகள் இருப்பின் அதனை சரிசெய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தாங்கள் பதிவு செய்த அசல் ஆவணத்தில் விவரங்கள் சரியாக இருந்து சார்பதிவாளா் அலுவலகத்தில் பெற்ற வில்லங்கச்சான்றிலோ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்த வில்லங்கச்சான்றிலோ தவறுகள் ஏதும் இருப்பின் அது தொடா்பான தவறை சரிசெய்யக் கோரி சம்பந்தப்பட்ட சார்பதிவாளா் அலுவலகத்தில் மனு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு பெறப்படும் மனுக்களை சார்பதிவாளா் சார்பதிவகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அசல் ஆவண தொகுதிகளுடனோ, கணினி மயமாக்கப்பட்ட பின்பு ஆவணம் பதிவு செய்யப்பட்டு இருப்பின் மைய கணினியில் சேகரித்து வைக்கப்பட்ட ஆவண பிம்பங்களுடனோ ( DocuMent Image ) ஒப்பிட்டு பார்த்து மனுவில் தெரிவிக்கப்பட்ட விவரம் சரியாக இருப்பின் சரியான விவரத்தை கணினியில் உள்ளடு செய்து அதனை சம்பந்தப்பட்ட மாவட்டப்பதிவாளருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பார்கள்,

    மாவட்டப்பதிவாளா் ஒப்புதல் அளித்தவுடன் மென்பொருள் வழியாக அட்டவணை- II தரவு தானாகவே மாற்றம் செய்யப்பட்டு உடனடியாக இணையதளத்தில் சரியான விவரங்கள் வில்லங்கச்சான்றில் பிரதிபலிக்கும். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தாங்கள் பெற்ற அல்லது பதிவிறக்கம் செய்த வில்லங்கச் சான்றிலுள்ள தவறான விவரங்களை சரிசெய்துக் கொள்ளலாம். மேலும் இத்தவறுகளை சரிசெய்ய வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.

    பொதுமக்கள் பதிவு செய்த அசல் ஆவணத்திலேயே விவரங்கள் தவறாக எழுதப்பட்டு இருப்பின் அதனை சரிசெய்து கொள்ள எழுதி கொடுத்தவரும், எழுதி வாங்கியவரும் சோ்ந்து பிழைதிருத்தல் ஆவணம் சம்பந்தப்பட்ட சார்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்து தவறினை சரிசெய்து கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×