search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்
    X

    நாகை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிக்கல் கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த சிக்கல் கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நாகை ஒன்றிய செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜா (தலைஞாயிறு), வெங்கட்ராமன் (கீழையூர்), ஒன்றிய தலைவர்கள் சந்திரகுமார் (கீழ்வேளூர்), தமிழ்மாறன் (கீழையூர்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். 

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை - திருவாரூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    Next Story
    ×