search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்டி எடுக்கும் கோடை - திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களில் 105 டிகிரி வெயில்
    X

    வாட்டி எடுக்கும் கோடை - திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களில் 105 டிகிரி வெயில்

    கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் திருச்சி, திருவள்ளூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிக பட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது.
    சென்னை:

    கோடைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருச்சி, திருவள்ளூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிக பட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது. நாமக்கல், சேலம், வேலூரில் 103 டிகிரியும், தருமபுரி, மதுரையில் 102 டிகிரியுமாக வெயிலின் தாக்கம் இருந்தது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மீனம்பாக்கத்தில் நேற்று 100.22 டிகிரி வெயில் அடித்தது.

    இதே போல் நகரின் மற்ற இடங்களிலும் இதனை நெருங்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு அஞ்சும் நிலையில் உள்ளனர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் நேற்று 103.1 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    சாலைகளில் சென்றவர்கள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் மரங்களை தேடி நிழலில் ஓதுங்கினர். வீடுகளில் பகலில் புழுக்கத்தில் தவித்த மக்கள் இரவிலும் வியர்வை மழையில் நனைந்தனர்.

    தற்போதே வெயிலின் தாக்கம் 103 டிகிரியை தாண்டி உள்ளதால் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், நுங்கு, தர்பூசணிகளை அதிக அளவில் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இதே போல கம்மங்கூழ் கடைகள் மற்றும் செயற்கை குளிர்பான கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    சிறிய இளநீர் 30 ரூபாய் வரையும், அதிகபட்சமாக பொள்ளாச்சி இளநீர் 50 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. 3 கண்கள் கொண்ட ஒரு நுங்கு 10 ரூபாய்க்கும், தர்பூசணி ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் இயற்கை குளிர்பானங்களை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள்.
    Next Story
    ×