search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே கூட்டணி மலர்கிறதா? - அ.தி.மு.க. நாளேட்டில் சூசக தகவல்
    X

    பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே கூட்டணி மலர்கிறதா? - அ.தி.மு.க. நாளேட்டில் சூசக தகவல்

    பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கூட்டணி மலரும் நிலை ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் சூசக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வே மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்த நேரத்தில், எந்தவித எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல், அவருக்கு உரிய அரசு மரியாதையை வழங்கியது.

    இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே இருப்பது ஊடலா? என்ற கேள்வி எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் எழத் தொடங்கியது. இந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி மலரப்போகும் தகவல் அ.தி.மு.க. தரப்பில் சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நேற்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    தமிழகத்தை ஆளும் அ.தி. மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க, மக்கள் செல்வாக்கற்ற, போராட்டங்களை தி.மு.க. திட்டமிட்டு நடத்தி வருகிறது. அவர்கள் நடத்தும் தேவையற்ற போராட்டங்கள் அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயம் போல் விரைவில் மறைந்துவிடும்.

    காவிரி பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் இணக்கமான முடிவுகளை எடுத்துவரும்போது, கூட்டணி கட்சிகளின் துணையோடு போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை கலாசார விதைகளை தமிழகத்தில் தூவிவிடும் முயற்சியில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. சுயநலங்களோடு தி.மு.க. நடத்துகிற போராட்டங்களை, தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான், போராட்டங்களுக்கு ஆதரவளிக்க தமிழக மக்கள் முன்வரவில்லை.

    கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கத்தான் போகிறது. அதில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டத்தான் போகிறார்கள். அதற்காகத்தான் தமிழக அரசும் பொறுமை காக்கிறது. மக்கள் ஆதரவற்ற தி.மு.க.வின் போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய வண்ணம் இருக்கிறது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது. எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்சினையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ? என்ற அச்சம் கொண்டிருக்கும் தி.மு.க., தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.

    எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலேயே அ.தி. மு.க. - பா.ஜ.க. இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    முன்னதாக, வரும் ஆகஸ்டு மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் குரியனின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, அந்த மாத இறுதியில் புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, பா.ஜ.க. அறிவிக்கும் வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது. 
    Next Story
    ×