search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரவாண்டியில் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கி பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    விக்கிரவாண்டியில் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கி பெண்ணிடம் நகை பறிப்பு

    விக்கிரவாண்டியில் வீடு புகுந்த மர்மமனிதர்கள் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கி பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி கலைமணி (26). இவர்களுக்கு அஸ்வந்த் (3), 1½ வயதில் பிரதீப் என்ற மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு பின்பக்க கதவை காற்றுக்காக திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தார்.

    இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் 3 பேர் இன்று அதிகாலை வீட்டின் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் கலைமணியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றனர்.

    அப்போது கண்விழித்த கலைமணி செயினை பறிக்க விடாமல் இறுக்க பிடித்து கொண்டு திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த சுரேஷ் அவர்களை பிடிக்க முயன்றார்.

    ஆனால் மர்ம மனிதர்கள் சுரேசை உருட்டுக்கட்டையால் தாக்கினர். பின்னர் கலைமணி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    மர்ம மனிதர்களின் தாக்குதலில் காயம் அடைந்த சுரேசை அவரது மனைவி கலைமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சுரேஷ் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வெங்கட்ராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    செயினை பறித்து கொண்டு தப்பி சென்ற மர்ம மனிதர்கள் 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
    Next Story
    ×